Monday 20 April 2020

காடோடி - நக்கீரன் ( அடையாளம் பதிப்பகம்)

காடோடி - நக்கீரன் (அடையாளம் பதிப்பகம்)

இயற்கையை முன்னின்று அழிக்கும் மனிதர்கள் அதில் முரணாக சிலர் இயற்கையை வாழ்வாதாரமாக நினைத்து உருகி கொண்டே அழித்து கொண்டு இருக்கும் இயலாதவர்கள் , இன்றைக்கும் இயற்கையின் பிள்ளைகளாக வரும் தொல்குடிகள், மரங்களை டாலராக பார்க்கும் முதலாளிகள், இது வரை அறிந்திடாத பலப்பல உயிரினங்கள், விலங்குகள்,செடிகள், மரங்கள், கனிகள் என்று பலவற்றை ஆவணப்படுத்திய நாவலே காடோடி.  முழுக்க முழுக்க இயற்கை அன்னையின் இருப்பிடமான காடுகள் விலங்குகள் பறவைகள் பூச்சிகள் ஓடை நதி அருவி என்று இவைகள் மேல் அளப்பறியா அன்பை செலுத்தி ரசித்து வணங்கி அவைகளை போற்றி பாதுகாக்க வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்துகிறது.



மலேசியா இந்தோனேஷிய காடுகளை முன்னின்று அழித்த ( வெறும் அழித்த என்று கூற கூட முடியவில்லை பாதம் படும் இடங்கள் முழுக்க இழை தழைகளாகவும் காய் கனிகளாகவும் அன்னார்ந்து மேலே பார்த்தால் வானம் கூட அங்கங்கே மரம் கிளைகள் வழி விட்டு மின்மினிப்பூச்சின் ஒளி போல தெரிந்தது போகி மொத்த காடும் பாலைவனம் போல ஆக்கபட்டால் யோசித்து பாருங்கள்) நிறுவனங்களை மனிதர்களை காட்டிக் கொடுப்பது போல சாட்சியாக ஆசிரியரே வாக்குமூலம் அளிக்கிறார் நாவலாக.

காடு, அரிய வகை உயிரினங்கள் என்று இயற்கையின் மேல் அளவில்லா காதல் கொண்டவர் அதை அழிக்கும் வேலைக்கு செல்கிறார் அப்போதாவது அந்த இடங்களை காண முடியும் என்ற ஆசையில். ஆனால் இறுதியில் அவரின் மனநிலை என்ன கொடுத்த வெகுமதி என்ன என்பதை அவசியம் நாவலை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். அப்படி அங்கு சென்று உடன் இருக்கும் நண்பர்கள், ஊழியர்கள் , வேலையாட்கள் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலாச்சாரம் எல்லாம் ஓரிடத்தில் ஒன்று கூட குடும்பமாக முகாமில் இருக்கின்றனர். மலேசிய இந்தோனேஷிய பூர்வகுடிகள் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்து ஆசிரியர் கூறுகிறார். பல உயிரினங்களை அவர் பார்ப்பதாக நாம் வாசிக்கும் போதெல்லாம் நாமும் பார்க்க வேண்டுமே என்று ஏங்க வைத்து விடுகிறார். இன்னும் சொல்ல போனால் அவர் குறிப்பிட்ட பல உயிரினங்களை அப்பொழுது தான் முதல் முறை வாசிக்கிறேன். அவர் குறிப்பிட்டு இருக்கும் உயிரினங்களை எல்லாம் தனி பதிவாக போட வேண்டும்.

பல இடங்களில் வாசிக்கும் போது விஸ்வலாக உணர முடிந்தது. இன்னும் சொல்ல போனால் நீங்கள் மிகையாக நினைத்தாலும் உண்மையாக எனக்கு தோன்றியது கதையில் வரும் பிலியவ், ஒமர், ஆங், பார்க், அன்னா, ஜோஸ் என்று பலரை அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்ப உருவம் கூட கொடுக்க முடிந்தது பாதி நாவலை கடக்கும் போதே அந்த உருவங்கள் பேசுவது போலவே வாசித்தேன். அதிலும் பிலியவ் என்ற தொல்குடி பெரியவரின் செய்கைகள், பேச்சு , ஏக்கம் , விரகத்தி என்ற அத்தனையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.

கதையில் சிலாங்கன் பத்து என்ற மூதாதை மரம் வரும் அதை பற்றிய விவரனைகள் அதற்காக பிலியவ் அவர்கள் ஏங்குவது மற்ற ஒமரும் ஆசிரியரும் இயலாமையில் தவிப்பது என்று மிக உணர்ச்சிபூர்வமாக அமைந்திருக்கும் அந்த பகுதி. அந்த மரம் அழிக்கபட்டதை விவரிக்கும் இடமே எவரையும் கலங்க வைத்து விடும்.

ஜோஸ் என்ற நண்பனுகாக அவனின் பூர்வ குடியினர் தங்கி இருக்கும் இடத்துக்கு செல்லும் ஆசிரியர் அவர்களின் கலாச்சாரங்களை பற்றி குறிப்பிடுவது வேட்டை முறைகள் பண்பாடு என்று கூறுவதை வாசிக்கும் போது நம்முடைய பண்டைய கால வழக்கங்கள் மனதில் வந்து உறுத்தியது. அந்த இடத்தில் வரும் மென்மையான காதல் பின்னர் வரும் பிரிவு என்று மனித உறவுகளை உணர்வு பூர்வமாக வாசித்த நிறைவை தரும் அந்த பகுதி.

ஒமர் எழுதியதாக வரும் கடிதம் கிட்டத்தட்ட ஆசிரியரை மட்டுமல்ல நம்மையும் உறையவைத்துவிடும் அந்தளவுக்கு இயலாமையின் உச்சமாக இருந்த மனதின் எழுத்தாகவே பதியபட்டுள்ளது. ஏனென்றால் தந்தை மகன் போன்று இருந்த உறவு என்னவானது என்பதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் கல்லூரியில் நான்காண்டுகள் முடிந்து இறுதி நாள் தங்கி இருந்த வீட்டை விட்டு கிளம்பும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஓடிய எண்ண ஒட்டங்கள், பின்னர் நான் கோவையில் வேலை பணி புரிந்த போது அந்த ப்ராஜெக்ட் முடிவுற்று பின்னர் ஒவ்வொருவரும் கிளம்பும் போது வந்த உணர்ச்சிகரமான தருணங்களை இந்நாவலில் முழு வேலைகளும் அழிப்பும் முடிந்துவிட்டு ஒவ்வொருவராக சில குழுக்களாக என்று குடும்பமாக எந்தவித பிரிவினைகளன்றி வாழ்ந்துவந்தவர்கள் பிரிந்து போவதை ஆசிரியர் பதிவு செய்து இருப்பது ஆகசிறந்தது மனதை கொள்ளை கொண்டது அந்த பகுதி.

இது போல நாவல் முழுக்கவும் மெய் மறக்க செய்திடும். அவரின் உண்மையான வலி வேதனைகளை வாசகனுக்கு கடத்தியதில் இந்நாவல் மிக பெரிய வெற்றி பெறுகிறது. என்னுடைய வாசிப்பனுபவத்தில் சில வகைகள் தான் கலங்க செய்யும் அவைகளுக்கு பிறகு வாசிக்கும் போது கண் கலங்கியது ஆசிரியர் நக்கீரன் அவர்களின் காடோடி நாவல் தான் . அதிலிருந்து மீள முயற்சித்து கொண்டு இருக்கின்றேன். நிச்சயம் என்னளவில் வாசிப்பால் என்னை மாற்றம் தேடல் என்று மனம் வேறொரு நிலை கொண்டு சேர்க்க போகின்ற மிக முக்கியமான நாவல்.

பிலியாவ் போல தொல்குடியாகவே பிறந்திருக்கலாமோ என்று ஏங்குகிறேன்.

கான் நிலங்களை கண்டு ஆசை தீர சுற்ற வேண்டும் போல தோன்றுகிறது.

காடோடி- வன அழிப்பை ஆவணப்படுத்திய உன்னதமான படைப்பு.

Lakshmi Saravanakumar அண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

சென்னையில் புத்தகங்கள் வாங்கிய போது சில புத்தகங்களை கழிக்க வேண்டிய நிலை அப்போது இந்த நாவலை அப்புறம் வாங்கிக்கலாம்ணா என்று சொன்ன போது உரிமையாக இதை கண்டிப்பா வாங்கு நல்ல நாவல்னு பரிந்துரைத்தது லக்‌ஷ்மி அண்ணன் தான்.

Sunday 30 August 2015

வாசிப்பினால் பெற்றிடும் அனுபவங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே சந்திக்கின்றோம்  வேறு வழியின்றி இன்றோடு இந்த தளம் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியதால் ஏதாவது உருப்படியாக பதிவு செய்யலாம் என்று கடந்த மூன்று மாதங்களாக நான் வாசித்த புத்தகங்களை பற்றிய என் கருத்தக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்......

ஆதவனின் காகித மலர்கள் -

ஆதவனின் எழுத்தை படிக்க நிச்சயம் மன தைரியம் வேண்டும் எப்படியென்றால் அவர் கூறும் கதாபாத்திரங்களின் குணாதிசியங்கள் அனைத்திலும் வாசிப்போரின் எண்ணங்களை பிம்பங்களாக கூறுவது போலவே அமைந்திருக்கும். இதை ஏற்று கொள்ள நிச்சயம் மன தைரியம் இருந்தாலொழிய வாசிக்க இயலாது.



மனிதர்களின் எண்ணங்களை அப்பட்டமாக தன்னுடைய எழுத்தின் மூலம் எடுத்து வைக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்காக அணியும் வேஷங்களை வெளிப்படையாக கூறுகிறார் அதில் அம்மா, அப்பா, தம்பி , தங்கை என்று பாரபட்சமெல்லாமில்லை.

பசுபதி ,பாக்கியம் மிஸ்ஸஸ் பசுபதி அவர்களின் மகன்கள் விசுவம் , செல்லப்பா , பத்ரி, விசுவதின் மனைவி பத்மினி , செல்லப்பாவின் நண்பன் ரமணி , சங்கர் , பத்ரியின் நண்பன் கணேசன், தோழி தாரா. கணேசனின் அப்பா ஐயர், அம்மா , தங்கை, பத்திரிக்கையாளர் நரசிம்மன்,விசுவத்தின் நண்பன் உண்ணி அவன் மனைவி. பத்மினியின் வீட்டார்கள் அப்பா மற்றும் அவள் அண்ணன். பசுபதியின் மகன்களின் நினைவலைகளில் அடிக்கடி வரும் அவர்களின் தாத்தா. உணவுத்துறை மந்திரி, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என்று இவர்கள் தான் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் முறையே விசுவம் , செல்லப்பாவின் பார்வைகளில் அதிகம் சென்றாலும் அனைவருமின்றி கதை முழுமை அடைந்திருக்காது.

நாவல் முழுக்க டில்லியை சுற்றி தான் கிட்டத்தட்ட டில்லியை சுற்றி பார்க்க இந்நாவலை க்கைடாக கூட உபயோகிக்கலாம் போல. அங்கும் வசிக்கும் மூன்று வர்க்க குடும்பங்களின் எண்ணவோட்டங்களே கதை. ஒவ்வொருவர்களுடைய குணாதிசியங்களை அப்பட்டமாக பதிவு செய்துள்ளார். குடும்ப உறவுகள், தொழில்துறை போட்டி, மாணவ அரசியல், பொது அரசியல், காதல் , நட்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு, துரோகம், காமத்தின் வேட்கை , மனிதர்களின் பாகுபாடுகள் , என்று இவைகளை பற்றி அதிகம் விவரிக்கின்றது கதை.

இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுமே தனித்துவம் வாய்ந்தவைகள் முதன்மை பாத்திரமான விசுவம் அமெரிக்காவில் இருந்து பத்மினியுடன் ஆய்வுக்காக இந்தியா வருவதில் தொடங்குகிறது நாவல். விசுவம் - தன்னிடம் யார் உரையாடினாலும் பழகினாலும் அவன் மனம் என்னவோ அவர்களின் அந்நேரத்தில் அவர்கள் அணியும் வேஷங்களையே ஆராயும் அது அம்மா , அப்பா , மனைவி என்று யாராகினும். அது போல அல்லாமல் தான் தனித்துவமானவன் என்றே எண்ணிக்கொண்டு இருப்பவன் அதன் வழியாக தன்னை தானே யார் என்ற கேள்விக்கு விடைத்தேடி கொண்டிருப்பவன். நாவலில் எனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் விசுவம் தான். அவனின் எண்ணங்கள் பெரும்பாலும் என்னைப்போல பலருக்கு ஒற்றுப்போகும் ஆனால் அதை ஏற்க உங்கள் மனதில் தைரியம் வேண்டும். விசுவம்- பத்மினியிடையே வரும் உரையாடல்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் அதிலும் இருவரும் மனமிட்டு தங்களுக்குள்ளே இருக்கும் கேள்விகளுக்கு விடை தேட ஒருவருக்கொருவர் விவாவதம் செய்யும் இடங்கள் வாசிக்கும் போதே படபடப்பாகும்.

அடுத்து என்னை மிக கவர்ந்தது செல்லப்பா கல்லூரி முடித்தும் இன்னும் டிகிரி வாங்காமல் அரியர் க்ளியர் பண்ண முயற்சித்து கொண்டு இருப்பான். இவனும் யாருடன் பழகினாலும் அவர்களை பற்றிய அந்நேர கோபங்கங்களை மனதினுள் போட்டு தன்னைத்தானே கோபடுத்திக்கொள்வான் ஆனால் வெளியே சகஜமாக உரையாடுவான். இயற்கையின் மேல் தீராத காதல் கொண்டவன் அதனாலே பெண்களின் மீது பேரார்வம் கொள்வான் ஆனால் அவனுக்கு எந்தவொரு பெண்ணின் அரவனைப்பும் கிடைத்தபாடு இருக்காது அவனின் அம்மாவின் செய்கையில் கூட இவனாக குற்றம் கண்டுபிடித்து தனக்கு தானே திட்டிக்கொள்வான். தீராத காம வேட்கையில் தவிப்பவனுக்கு வடிகாலே நீண்ட நேர பேருந்து பயணங்களில் கிடைக்கும் பெண் வாசம் தான் பின்னார் அதற்காவும் தனக்கு தானே வேதனையும் அடைவான் இப்படியாக தன்னிலை எதுவென்று தெரியாமல் திணறிக்கொண்டு இருந்தவனுக்கு நாவலின் முடிவில் மிக நன்றாக அவனுக்கு ஏற்றவையாக முடித்திருப்பார் ஆதாவன்.

கணேசன் பத்ரியின் கல்லூரித் தோழன் நடுத்தர வர்க்கத்தில் இருந்து மேல்மட்டத்திற்கு செல்ல துடித்துக்கொண்டு இருக்கும் மாணவன். தன் வீட்டாரையே எந்நேரமும் பழித்து கொண்டு தனக்குத்தானே வெறுத்துக்கொள்வான். பத்ரியிடம் கூட வெளிநட்பில் சகஜமாக இருந்தாலும் உள்ளுக்குளே வஞ்சம் தகந்து கொண்டு தான் இருக்கும் அதுவும் நாவலின் இறுதியில் கச்சிதமாக பத்ரியை பெரும் போராட்டத்தில் கோர்த்துவிடுவான் தன் சாமர்த்தியத்தால். இவன் எதிர்பார்த்தது போல நரசிம்மன் வழியாக தனக்கான அடையாளத்தை பெற்று கொண்டு இருப்பது போல இவனின் முடிவு இருக்கும்.

பசுபதி ஒவ்வொருவருக்காவும் அவர்களுக்கான வேஷம் அணியும் நடிகராகவே இருப்பார். அதன் பாதிப்பை இறுதியில் உணர்ந்து கலங்கவும் செய்வார். தன் தொழிநிமிர்த்ததில் தானாக செயல்பட முடியாமல் மற்றவர்களுக்காக மற்றவர்களாலேயே அவர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவராகவே இருப்பதாலே மிகவும் வருத்தப்படுவார். அப்படி இருந்தமையால் தான் தன்னுடைய நிலை இன்று இப்படி இருக்கின்றது என்பதையும் நினைத்து பார்க்கும் சாதாரண எண்ணவோட்டங்கள் கொண்ட சராசரி மனித பிம்பங்களை கொண்ட பாத்திரமாக இருப்பார்.

பாக்கியம் - பத்மினி , பத்மினி நவநாகரீகமான வாழ்க்கைமுறையால் மிக கேஸ்வலாக எல்லோரிடமும் பழகுபவள் அவளை பார்த்து பாக்கியமும் அவ்வாறு மாற துடிப்பவள் ஆயினும் அவளும் அப்படி தன் கணவரின் நட்பு வட்டங்களை அரவணைத்து பல பார்ட்டிகளுக்கு சென்று இடையில் நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும். தன் மருமகளின் நடவெடிக்கைகளை பார்த்து தன் மேல் மோகம் கொண்டவளாய் மாற துடிப்பவள் அவ்வாறே மாறியும் விடுவாள். அவள் மேல் கொண்ட பொறாமையுணர்வை மறைக்க எண்ணுவாள் அவளில்லாத போது அவள் எதிரே வந்துவிட்டாள் அதை மறைக்க நினைத்ததை மறந்து விடுவாள். குடும்பத்தில் எல்லோரையும் எப்படி இவள் ஒரேசேர திருப்த்தி படுத்த நினைக்கிறாள் என்று தன் அம்மா மீது விசுவம் ஆச்சரியம் கொள்வான் அவ்வாச்சிரியம் வாசிக்கும் நமக்கும் ஏற்படும். நவநாகரீகமான வாழ்கையின் உச்சமாய் இவள் எடுக்கும் ஓர் முடிவால் தான் நாவலின் முடிவாக இறுதி வாக்கியம் இருக்கும்.

பத்திரிக்கையாளர் நரசிம்மன் இளையோர்களின் பேச்சை நன்கு கவனிப்பவர் அவர்களின் பேச்சிற்கு மதிப்பளிப்பவர். தாரா, கணேசனின் கட்டுரைகளை பிரசுரித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவார். அரசியல் சம்பாஷனைகளை விவாதித்து வாசிக்கும் நம்மையும் ஊகிக்க வைக்கும். கல்லூரி மாணவ அரசியல், பொது அரசியல் எல்லாம் இன்றும் விவாதிக்க வேண்டிய வகையில் விவரித்து இருப்பார் ஆசிரியர்.

அதிலும் நாவல் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோ ஒரு கதாபாத்திரங்களின் பார்வையில் தான் சென்றது ஆனால் இறுதி இரண்டு அத்தியாயங்கள் மூன்று வரிகளுக்கு மாறி மாறி பலரின் பார்வையில் எளிதாக புரியும்படி அமைத்தது தான் ஆகச்சிறப்பு அவ்வளவு அருமையாக இருந்தது. பாக்கியம் நாடகத்தில் நடிப்பாள், செல்லப்பா- தாரா அங்கே காண இருப்பார்கள், நரசிம்மன்- கணேசன் உரையாடி கொண்டு இருப்பார்கள், விசுவம்-உண்ணி அவன் மனைவி காரில் பேசிக்கொண்டு வருவார்கள்,பசுபதி மந்திரியை வரவேற்று உரையாற்றுவார் இத்தனை சம்பவங்களையும் எவருக்கும் எளிதாக புரிவது போல ஒரு கேள்வி பதிலை இரண்டு சம்பவங்களோடு கோர்த்து புதிய நான்-லீனியர் வகையில் அமர்களபடுத்திருப்பார் ஆதவன்.

ஆதவன் அவர்களின் எழுத்தில் அடிக்கடி இதை காணலாம். "உதட்டை பிதுக்கினான் (பிதுக்கிக்கொண்டான்)" "தோள்களை குளுக்கினான்(குளுக்கிக் கொண்டான்)" பெண்களிடம் போலி காதலை வெளிகாட்டுமிடத்தில் அவனை நாயாக உருவபடுத்தி அவளின் சிரிப்பை ரொட்டியாக கூறுவார்( அவன் பேச்சிற்கு மீண்டுமொரு ரொட்டி துண்டு கிடைத்தது). இப்படி பல வாக்கியங்கள் தனித்துவமாக இருக்கும் அது வாசிக்கும் போது நமக்கும் அதை யூகித்து ரசிக்க வைக்கும். மனிதர்களின் உள்மனதை நம்முடைய உள் எண்ணங்களை வாசிப்பின் வடிவில் தெரிந்து கொள்ள மிக சரியான தேர்வு ஆதவனின் படைப்புகள். அதில் இந்த காகித மலர்களும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றது. இணையதளத்தில் காகித மலர்களின் விரிவான நிறைய விமர்சனங்கள் இருக்கின்றது அதையும் வாசித்து பாருங்கள். நாவலையும் வாசியுங்கள் உங்களை நீங்கள் யாரென்று அறிந்து கொள்ள உதவும்.

                                                      ***************************

வாடிவாசல்- சி.சு செல்லப்பா 


இன்னும் பத்து வருஷம் போனா ஏன் இப்ப கூட பல பேருக்கு வாடிவாசல்னா ஏதோவொரு ஊருனு தான் நினைப்பாங்க இல்ல நினைச்சிட்டு இருப்பாங்க. தமிழர்களின் கலாச்சாரத்தை வீர பெருமைகளை ஆவணப்படுத்தியது போக அழிந்து கொண்டு இருப்பது ஏராளம் அதில் கடந்த சில வருடங்களாக அழிவின் இறுதிகட்டத்தில் ஜல்லிக்கட்டு இருக்கின்றது.

1959ல் எழுதப்பட்டது இல்லை இல்லை ஆவணபடுத்தபட்டது ஆம் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கிலேயே முழு கதையும் எழுதப்பட்டுள்ளது. காலையில் தொடங்கும் ஜல்லிக்கட்டு மாலை முடிவதோடு கதையும் முடிந்துவிடுகிறாது. ஆனால் இவைகள் வாசிக்கும் போது தரும் பரவசம் சிலிர்க்க வைத்துவிடும் எவரையும்.

பிச்சு, மருதன்,கிழவன்,ஜமீன்தார்,முருகன் எல்லாத்துக்கும் மேல காரி இவர்கள் தான் நாவல் முழுக்க. விருமாண்டி படத்தில் வரும் முதல் ஜல்லிக்கட்டு காட்சிகளில் இக்கதையின் பாதிப்பு ஏகபோகமாய் இருக்கும். கிழவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும் எல்லாவூரிலும் அவர் போன்றவர் நிச்சயம் இருப்பார்கள் எதேனும் விளையாட்டில் பங்கெடுக்காமல் ஆனால் அந்த விளையாட்டின் நுணுக்கங்களை அக்குவேறு ஆணிவேறாக பிரித்தெடுப்பது அப்படி தான் இக்கதையிலும் இவர் உதவுவார்.கிழக்கத்தியன் என்ற ஏளன பேச்சுக்களை காதில் வாங்காமல் வந்த வேலையை முடிக்க வேண்டுமென்ற குறியோடு இருக்கும் பிச்சு தான் கதாநாயகன்.

திரைப்படமாக எடுக்க அட்டகாசமான கதைகளமிது ஏன் யாரும் எடுக்கவில்லையென்று புரியவில்லை. இந்த கதைக்கு திரைக்கதை எழுதினால் கூட மிக அருமையாக இருக்கும். வாசிக்கும் போதே காட்சிகளாக மனத்திரையில் விரிவதாக இருப்பது தான் இக்கதையின் ஆகச்சிறப்பு. அதே போல மாட்டை அடக்கினான் புடித்தான் மாடு தழுவியது என்றெல்லாம் இல்லாமல் காட்சியாக காணும் போது என்னவெல்லாம் பண்ணுவார்களோ அதையெல்லாம் எழுத்தில் கொண்டு வந்து விட்டார். 

ஜெட் ஸ்பீட் படம்னு சொல்லுவோம்ல அதே போல ஜெட் ஸ்பீட் கதை. சாதாரண பழிவாங்கல் கதை தான் அதை அட்டகாசமாக சொல்லி இருக்கிறார்.

இதை படித்தவுடன் ஒரு ஆசை இக்கதையை தற்கால எந்த இயக்குனர் எடுத்தால் சிறப்பாக இருக்குமென்று. அடுத்தகனமே தோன்றியது வெற்றிமாறன் தான். அந்த கிழவன் கதாபாத்திரத்திற்கு ராதாரவி அட்டகாசமாக பொருந்துவார். 

காலச்சுவடு பதிப்பகம்.
                                                         *********************

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - வைக்கம் முகமது பஷீர்



இஸ்லாமிய சமூகத்தினரின் மூட நம்பிகையோ ??? தவிர்க்க வேண்டிய குடும்ப வழக்கங்களையோ (பெரும்பாலான மேட்டுக்குடியினர்களுக்கும் பொருந்தும்) முந்தைய தலைமுறையினரின் போலி பெருமைகளை பேசி திரிவோரை மிகச்சாதரணமாக அழுத்தமாக சாடியுள்ளார் பஷீர்.

அதிலும் எல்லாமதங்களிலும் இருக்கும் பிரசங்களை போல முஸ்லீம் மதங்களிலும் இருக்கும் பிரசங்களை பாரபட்சமின்றி இரவு நேர பிரசங்கள் பிரசங்கள் என்று எள்ளி நகையாடியுள்ளார்.

குஞ்ஞூத்தம்மா நாவலின் பிரதான பாத்திரம் அவளுடைய மழலையான மனம் , அப்பாவித்தனமான நிலை ,அவளின் இயலாமை என்று அவளுக்காக நம்மையும் இரக்கப்பட வைக்கும்.

பஷீர் அவர்களின் கதைகளை வாசிக்கும் போது அதில் வரும் வீடு, செடி, ஊர், மக்கள், மரம், ஆற்றங்கரை, பூ, ஆடு , மாடு , கோழி என்று அத்தனையும் நம்மை சுற்றி இருப்பது போன்ற உணர்வை தரும் அதே போல தான் இதிலும் என்னருகில் நடந்த கதையை கண்டவுணர்வே கிடைத்தது.

பால்ய கால சகி , மதில்கள் தந்த உணர்வால் இதில் இறுதி அத்தியாயங்களை வாசிக்கும் போது படபடத்து எங்கே இப்படி ஆகிடுமோ இல்ல என்னவாகுமோ என்ற பரிதவிப்பு தான் இந்த நாவலில் எனக்கு மிக பிடித்தது. 112 பக்கங்களே கொண்ட குறுநாவல் ஒரே வாசிப்பில் வாசித்துவிடலாம். வாசிக்காதவர்கள் அவசியம் வாசித்துவிடுங்கள்.

காலச்சுவடு பதிப்பகம்.


                                                              *******************

கானகன் - என்னுடைய வாசிப்புகள் எப்பொழுதுமே நான் தேடி போவது அல்ல சாருவை தவிர ஏனென்றால் நண்பர்களிடமோ அல்லது சாரு ரெஃபர் செய்வதை தான் விரும்பி வாசிப்பேன். அப்படி வாசித்தது தான் கானகன் நாவலும்.


எப்பொழுதுமே சாருவின் அறிமுகங்கள் மற்றும் நண்பர்களின் அறிமுகங்களும் தோற்றதே இல்லை விதிவிலக்கு உபபாண்டவம் , அறம் இவை தவிர்த்து அனைத்துமே என்னை ஒரே வாசிப்பில் வாசிக்க வைத்தவையே. அதில் இப்பொழுது கானகன்.

கானகன் லக்‌ஷ்மியினுடைய இரண்டாவது நாவல், உப்பு நாய்கள் அவரின் முதல் நாவல் அந்த நாவலே எனக்கு மிக பிடிக்கும் இதுவரை என்னிடம் உள்ள பதிப்பை நான்கு நபர்களுக்கும் மேல் வாசிக்க கொடுத்து உள்ளேன் இப்பொழுது கூட அந்நாவல் என்னிடம் இல்லை நண்பர்களிடம் தான் உள்ளது அவ்வளவு ஏன் சாரு கூட அந்நாவலை அவ்வளவு புகழ்ந்து எழுதினார். கானகனை கூட அவர் தான் வெளியிட்டாளும் அதை நாம் வாசித்து உணர வேண்டும் என்ற ஆசையிலே தான் வாசிக்க தொடங்கினேன்.

பொது வெளியில் வாழும் வாழ்க்கைக்கும் வனத்தில் வாழுவோர்க்குமான வாழ்க்கை எது என்ன எப்படி ஏன் என்ற கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொரு பக்கங்களிலும் உணர வைக்கன்றதே வாசிக்கும் போது.

வனத்தின் அழிப்பை இது போல எவரும் விவரித்ததில்லை அப்போது வனத்தின் குடியிருப்போரின் மனநிலையை மையமாக முழு கதையையும் அவர்களின் பார்வையில் கொண்டு சென்றது தான் ஆக சிறப்பு.

இதுவரை எந்தவொரு சிறுகதை , குறுநாவல், நாவலை வாசித்தடாதவர்கள் கூட இந்நாவலை வாசிக்க தொடங்கினால் வைக்க மனமிருக்காது. அதனுள் இறங்கி முடிக்காமல் வெளி வர இயலாது.....

...... கானகனின் என் பார்வை தொடரும் ( மீள் வாசிப்பு செய்து விரிவாக எழுத ஆசை நிச்சயம் பதிவு செய்வேன்)
                                                                      *******************

நகுலன்- (நினைவு பாதை)



பல சந்தர்ப்பங்களில் நான் ஒரு கோழை என்று எனக்குத் தோன்றுகிறது. யாருக்குக் குழைந்த மனம் இருக்கின்றதோ அவன் கோழை ஆகிறான். இதனால்தான் வேண்டாம்,முடியாது , இல்லை என்று சொல்ல வேண்டிய சந்தர்பங்களில் இவைகளைச் சொல்லாமல் நான் அவஸ்தைப்பட்டிருக்கிறேன்.

நகுலனின் நினைவு பாதை வாசித்து கொண்டு இருக்கின்றேன். புனைவை அடியோடு வெறுக்கிறாரே. அந்தவொரு காரணமே போதும் நகுலன் அவர்களின் அனைத்து பதிப்புகளையும் நான் வாசித்துவிடுவேன்....

மனிதன் ஒரு அசை போடும் மாடு- நகுலன்

நினைவு பாதை கடைசி இரண்டு அத்தியாயங்களில் கிட்டத்தட்ட இல்ல மொத்தமுமாகவே குழம்பி போகிவிட்டேன் ஒவ்வொரு பக்கத்தையும் இரண்டு முறை முறையே படித்தும் புரியாமல் ஆனால் விட்டு விடவும் முடியாமல் இழத்துச்செல்லும் எழுத்து. இறுதி அத்தியாயத்தில் முன்னர் ஏன் அப்படி இருந்தது என்பதை விளக்கினாலும் மீண்டும் இந்நாவலை முழுக்க வாசிக்க வேண்டும் உடனடியாக அல்ல கொஞ்ச நாள் சென்று... 

நாவலில் இருந்து... 

//நாயாக பிறந்திருந்தால்
நகரமெல்லாந்திரிந்திருக்கலாம்//

சச்சிதானந்த பிள்ளை கூறுவதாக வருவதையெல்லாம் நூலாகவே பதிவு செய்யலாம் அவ்வளவு உயிர்பானவைகள்.

                                                                      *******************-
ஒரு கடலோர கிராமத்தின் கதை- தோப்பில் முகமது மீரான் ( காலச்சுவடு பதிப்பகம்)



வடக்கு வீட்டு முதலாளி அகமது கண்ணு , அவரின் தங்கை நூஹூத்தும்மா , அவரின் மகள் ஆயிஷா அவரின் தங்கை மகன் பரீது அவரின் கணக்குபிள்ளை போன்ற அவுக்கார் மற்றும் அவரின் சொல்லையே நம்பி இருக்கும் லெப்பை , ஊர் மக்கள். முதலாளியை எதிர்க்கும் மஹமூது, மேக்கு வீட்டு ஆளுங்க , அசனார் லெப்பை என்று நாவலின் ஒவ்வொரு பாத்திரங்களும் வாசிக்கும் போது பரவசபடுத்துகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் இன்றும் கூட காணலாம் அல்ல வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று கதை கேட்டு இருப்போம் அது போல இதிலும் நல்ல நிலையில் பல தலைமுறைகளாக இருந்து வந்த குடும்பம் அழிந்து போகிறது அதையும் மீறி இஸ்லாமிய சமூகத்தின் மூட நம்பிக்கைளை அவர்களின் பார்வையிலேயே நியாபடுத்தாமல் அந்த அபத்தங்களை அப்படியே நமக்கு தெரியபடுத்துகிறார் ஆசிரியர். அதிலும் ஒருவன் மூட நம்பிக்கைகளை மிதித்து வாழ்ந்தால் அவனை ஊரே சேர்ந்து தூற்றபடுவதும். ஆங்கில கல்வியை சாத்தனின் வருகையாகவே எண்ணுபவர்களும் அதை தடுக்க சாத்தானை விட கேவலமான எண்ணங்களால் மக்கள் இருப்பதும். பள்ளி ஆசிரியரை ஊரை விட்டு விரட்ட அவரின் வீட்டின் முன் நிற்க இடமில்லாமல் மலம் கழித்து வைக்க சொல்லுவார் அசனார் லெப்பை. அதை கண்டு ஆசிரியர் மெஹூப்பூகான் அடையும் விரக்தி வாசிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்ளுகிறது. தங்ஙள் என்ற கதாபாத்திரம் தான் அத்தனை மூட நம்பிக்கைகளுக்குமான காரணியாக இருக்கின்றது அதிலும் அவரின் ஆசைகள் ,திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று வரும் பெண்ணிடம் தங்ஙள் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அருமையாக தெரியபடுத்தியுள்ளார் தோப்பில் மீரான் அவர்கள்.

ஒவ்வொரு அத்தியாயமும் முடிவை சொல்லி அடுத்த அத்தியாயத்தில் அவை விளக்கப்படுகிறது. இந்த வகை மிக நெருக்கமாக உணரமுடிகிறது வாசிக்கும் போது. மொத்தமாக நாவலை வாசித்து முடித்தவுடன் ஒரு தலைமுறையினரின் அபத்தமான மூடநம்பிக்கையான வாழ்வியலை கண்ட உணர்வை தருகிறது. அதே போல எந்தவொரு கற்பிதங்களையும் ஆசிரியர் கூறவில்லை அவர்களின் வாழ்க்கையை அப்படியே கூறியது தான் நாவலே முடிந்தாலும் அந்த மக்களின் எண்ணங்கள் மனதை விட்டு விலக மறுக்கின்றது.

வடக்கு வீட்டு முதலாளியின் இறுதி நிலையும் ஆயிஷாவின் முடிவும் மிகவும் பாதித்தது. செய்த தவறுக்காக பெறும் தண்டனையை விட , தவறு நடந்திடுமோ என்ற பயத்தில் தன்னை தானே தண்டித்து கொள்வதும் என்னவென்று நினைக்க சமூகத்தின் அவலங்கள் தானே அதற்கு காரணம். இறுதி வரை அந்த மக்களின் நம்பிக்கையிலேயே நாவலும் முடிந்து போனது அவர்களிடம் சென்று யார் புரியவைப்பது என்ற ஆதங்கத்தோடும் வேதனையாக மனமே நிலையில்லாமல் தவித்தது நாவலை முடித்த நிமிடங்களில். அது தான் இந்த நாவலின் வெற்றியாக எனக்கு புரிகிறது.

அடுத்த பதிப்புகளில் கடைசி பக்கங்களில் இருக்கும் வட்டார சொல்லாடல்களின் விளக்கங்களை அந்தந்த சொல்லுக்கு நேரே கொடுத்தால் இன்னும் எளிமையாக இருக்கும் இருந்தாலும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை வாசிப்பாளர்களின்றி அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புத படைப்பு.

                                                                   *******************

மரம்- ஜீ.முருகன் - உயிர்மை பதிப்பகம்



சமீபத்தில் இரண்டே நாளில் முடித்த நாவல் இதுவாக தான் இருக்கும். அவ்வளவு சுவாரசியமாக இருந்தது ஆனால் சுவாரசியம் மனிதர்களை நினைத்து பெருமிதமாக இல்லை வேதனையாக இருந்தது. எனக்கு ஆச்சரியமே மனதில் நினைப்பதை எல்லாம் எழுத்தாக கொண்டு வர முடியுமா என்ற கேள்வி நகுலனின் எழுத்தில் அவரே சொல்லி இருப்பார் ஆனால் இப்படி கவுச்சியான எண்ணங்களையும் கதாபாத்திரங்களாக படைத்து அவர்கள் வழியாக கூறுகிறார் ஆசாரியர்.

நாவலின் அனைத்து கதாபாத்திரங்களும் காமத்தின் வேட்கையில் தான் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எல்லோருமே சமூகத்தில் நல்ல மதிப்பு உள்ள வேலைகளில் இருக்கின்றனர். கவிஞர், கம்யூனிஸ்டுகள் , உலக இலக்கிய வாசிப்பாளர், பிரபலாமான ஒவியன் என்று அதிலும் கோபாலர் என்ற கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை வருகிறது ஆனால் உயரோடு இல்லை மரமாகவும் மற்றவர்களின் நினைவுகளிலும் வந்து கொண்டே இருக்கிறார் நாவலின் முடிவே கோபாலரின் பதில்களிலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்தது. என்னை கவர்ந்த கதாபாத்திரம் கிரிகரன் தான் ஆனால் அவனின் முடிவும் பின் அவன் பற்றிய உண்மைகளும் கூட கூச செய்தது ஆனால் அதற்கு காரணம் அவன் அம்மா சந்திரா, அப்பா கண்ணன் தங்கை ப்ரியா நண்பன் ரவி & சிவன் தான். அதே போல தோழர் பாலு அவரின் காம அத்தியாயங்களை வாசிக்கும் போதெல்லாம் பரிதாபம் தான் வந்தது மனிதனை எந்தளவுக்கு கேவலமாக கொண்டு போகும் என்று.

ஆரம்பம் முதலே எந்த கதாபாத்திரம் பேசுகிறது என்ற ஆவலை தூண்டி பின்னர் யாரவர் என்பதை நமக்கு தெரிவிப்பதை இறுதி அத்தியாயம் வரை தொடர்வது எதிர்பார்ப்பை தக்கவைக்கின்றது. பல இடங்களில் ஏற்று கொள்ள முடியாதவைகள் தான் என்றாலும் நிச்சயம் ஆங்காங்கே நடப்பது என்றே நினைக்க தோன்றுகிறது.

ஆன்மீகத்தை எவ்வளவு வியாபராமாக்க முடியும் என்பதையும் காமத்தின் எல்லை எதுவென்ற கேள்வியையும் மனிதர்களின் உண்மையான பிம்பங்களை வெளிகண்டால் சமூகத்தின் நிலை என்ன என்பதையும் கேள்வியாக கேட்டே நாவல் முடிந்தது போல தோன்றியது.

நாவலை பற்றி வேறு எதுவும் கூற தெரியவில்லையா?? பக்குவமில்லையா??? எதுவும் இல்லை எனக்கு பயமாக இருக்கிறது.

நிச்சயம் காலம் கடந்து நிற்க போகும் நாவல் மரம் அதை மட்டும் உறுதியாக கூற முடியும்.
                                                        *******************
இந்த கருத்துக்கள் ஏற்கனவே முகனூலில் பதிவு செய்தவை தான் ஆனால் இன்று இங்கே ஒன்றாக தொகுக்க வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

 நன்றி .......



Friday 30 January 2015

இசை - S.J.SURYA MAGICAL STORY



வாலி , குஷி , நியூ , அன்பே ஆருயிரே,கொமொரங் புலி (தெலுங்கு படம் பெயர் இப்படி தான் வரும்) என்று எஸ்.ஜே.சூர்யாவின் அனைத்து படங்களும் வெற்றிகளுக்கு அப்பாற்பட்டு சர்ச்சைகளுக்கும் தனித்துவத்துக்கும் பெயர் பெற்றவைகள். இயக்குனராக அவரின் அனைத்து படங்களும் பெரும்பாலோனரை கவர்ந்தவையே.அந்த வகையில் எனக்கும் அவர் எப்போது மீண்டும்  படம் இயக்குவார் என்று எதிர்பார்த்து இருந்தபோது கடந்த இரண்டரை வருடங்களாக எடுத்து இன்று வெளியாகி இருக்கும் படமே இசை. மிகுந்த எதிர்பார்ப்போடு காண சென்றேன். சிங்கபூரிலும் வேலை நாளில் ஓரளவுக்கு கூட்டம் வந்திருந்தது.



எஸ்.ஜே விடம் எனக்கு பிடித்ததே முதல் காட்சியிலயே படத்தின் கதையை வாய்ஸ் ஓவரில் சொல்லிவிடுவார், அதே இதிலும் டைட்டில் ஓடும் போது கதையை சொல்கிறார் . ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் முன் பெற்ற வெற்றியை இன்னொருவர் வென்று கொண்டே வருவார்கள் அது காலத்தினால் ஏற்படும் மாற்றங்கள் ஆனால் அவர்கள் எல்லோரும் யாரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. அப்படி இசை துறையில் 30 வருடங்களாக வெற்றிசெல்வன் கட்டிய சாம்ராஜ்யத்தை இரண்டே வருடத்தில் அதை தட்டி பறித்த ஏ.கே.சிவாவை வஞ்சம் கொண்டு தகாத வழியில் பழி தீர்க்க நினைக்கிறார் வெற்றி செல்வன். அதனால் வரும் சம்பவங்களே கதை என்று கூறிவிடுகிறார். (இவர் கூறும் போது டைட்டில் ஸ்லைடில் எம்.ஜி.ஆர் , கருணாநிதி , ஜெயலலிதா, கபில் தேவ் , கவாஸ்கர் , சச்சின் , ராஜேஷ் கண்ணா , அமிதாப் , கே.பி மகாதேவன் , எம் .எஸ்.வி , இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் ,பாலசந்தர் , பாரதிராஜா , மணிரத்னம் , வெற்றிசெல்வன் (சத்யராஜ் ) இவர்களின் புகைப்படங்கள் வருகிறது ) அதை தொடர்ந்து நாயகன் அறிமுக பாடலில் அவர் பெற்று இருக்கும் புகழை சொல்லிவிடுகிறார். அடுத்த காட்சியில் அந்த பாடல் காட்சியை ம்யூட் மோடில் பார்த்து சிவா மீது எந்த அளவுக்கு வெற்றிசெல்வன்  வெறுப்பு கொண்டுள்ளார் என்பதையும் காட்டிவிடுகிறார். அடுத்து இயற்கையான இசையில் ஆல்பம் ஒன்று உருவாக்க காட்டுக்கு செல்கிறார் சிவா. அங்க இசைய பிடிச்சாரோ இல்லையோ அக்மார்க் எஸ் .ஜே சீன்ஸ் நல்லா பிடிச்சு நமக்கு காட்டி இருக்கார் உடன் இசையை அப்பப்போ பிடிக்குறார் ஆமா நாயகியை கண்டு காதலில் விழுகிறார். அதில் இருந்து நாயகியுடன் அங்கு நடைபெறும் காட்சி இங்கே வெற்றிசெல்வன் சிவாவை  நினைத்து நினைத்து வெறுப்பின் உச்சம் செல்லும் காட்சி என்று இடைவேளைக்கு 15 நிமிடங்கள் வரை மாறி மாறி வந்து கொண்டு இருக்கின்றது, நிறையவே பொறுமையை சோதித்தது. ஆனால் காட்டை விட்டு நாயகியை திருமணம் செய்து கொண்டு சென்னை திரும்பியவுடன் திடீர் திடீர் திருப்பங்களுடன் இடைவேளை.

இடைவேளைக்கு பிறகு படம் விறுவிறுப்பாக செல்கிறது பேரும் புகழுடன் இருக்கும் ஏ.கே சிவாவை மனநோயாளி ஆக்க அவருடன் இருக்கும் வேலை ஆட்களை வைத்தே வெற்றிசெல்வன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெறுகிறார். எல்லா இயக்குனர்களும் மீண்டும் வெற்றிசெல்வனை நோக்கி படையெடுக்க சிவா மனநல காப்பகத்தில் சேர்க்கபடுகிறார். அதில் இருந்து மீண்டு வந்தாலும் மீண்டும் அவரை முற்றிலும் செயல் இழக்க வைக்க திட்டம் தீட்டுகிறார் வெற்றிசெல்வன் அதை எல்லாம் தாண்டி  மீண்டாரா இல்லை என்னவானார் என்பதை  வெள்ளித்திரையில் காண்க.

இதுவரை நான் எழுதிய விமர்சனத்திலேயே இவ்வளவு விரிவாக கதையை சொன்னது இல்லை. இப்படத்திற்கு சொன்னாலும் ஒன்றும் ஆகபோவதில்லை பார்க்கும் போது இயக்குனரின் மொழி கட்டிபோட்டுவிடும். என்ன வேண்டும் என்றாலும் காட்சியாக்கலாம் ஆனால் அதை இறுதியில் நியாயபடுத்துவதில் தான் இயக்குனரின் நேர்மை பளிச்சிடும். அதில் அட்டகாச வெற்றி பெறுகிறார் எஸ்.ஜே. ஏன்டா இந்த சீன்ஸ் என்று யோசித்த போது அனைத்துக்கும் இறுதியில் விடை கூறுகிறார். நடிப்பிலும் மனுஷன் பிச்சு உதறி இருக்கார் சில ஓவர் டோஸ்கள் சத்யராஜை முந்த வேண்டும் என்பதால் வந்திருக்குது. வெற்றிசெல்வனாக பின்னி பிடல் எடுத்து விட்டார் சத்யராஜ் அசால்டான டயலாக் டெலிவெரி , அனாசியமான உடல் மொழி என்று அம்மாவாசயை நெருங்கி உள்ளார்.

இசையின் இசை அவரை இசை அமைப்பாளராக ஆக்கியது தவறேதும் இல்லை, நிச்சயம் நிறைய இயக்குனர்கள் அவரிடம்  இசை கேட்டு 
செல்லுவாங்க. பிஜிஎம் கூட நல்லாவே போட்டு இருக்கார்.காட்சிபடுத்திய விதத்தில் கூட பாடல்கள் அனைத்தும்  நன்றாகவே உள்ளது . ரம்மியமான ஒளிப்பதிவு. வசனம் மிக பெரிய பலம் அதுவும் சத்யராஜ் பேசுவது எல்லாம் கைதட்டல்கள் அள்ளியது.

இயக்குனராக எஸ்.ஜே வின் உண்மையான மிக பெரிய வெற்றி இப்படம். அதே போல இப்படத்திற்கு இந்தவகையான க்ளைமாக்ஸ் இல்லை என்றால் படம் நிச்சய தோல்வி தான். அந்த முடிவும் கூட விமர்சகர்களால் சொல்லப்பட்டு அதை தெரிந்து படம் பார்த்தால் படம் பார்ப்பதே வேஸ்ட். இப்படி சிக்கலான முடிவை வைத்து அதில் வெற்றி பெறுவோமா இல்லையா என்று தெரியாமல் திரை ரசிகர்களை நம்பி வெளியிட்ட எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிக பெரிய வணக்கங்கள்.

இசை - அதிர்வு நிச்சயம்

பின் குறிப்பு :

1. நான் பார்த்த காட்சி எல்லோரும் ஆராவரமாக கண்டனர் குடும்பம் சகிதமாக , படமுடிவு கூட பலருக்கும் பிடித்தே இருந்தது காதுபட கேட்டது.

2.மூன்று மணி பத்து நிமிடங்கள் என்பது தெரியவே இல்லை  இரண்டாம் பாதி ஜெட் வேகம்.

3.எஸ்.ஜே மேஜிக் நியூ எட்டு வயசு பையன் பெரிய பையன் , அ ஆ காதலை ஆன்மாக்கள் சேர்த்து வைப்பது போல இதிலும் உண்டு அது தான் ஹாட் டாபிக்.

Thursday 27 November 2014

இங்க காதலும் இருக்கு



" மச்சான் சக்தி, உனக்கு தான் ஒன்னும் பேச வர மாட்டேங்குதே. அப்புறம் ஏன்டா மூச்ச போடுற "

"அப்படி இல்லைட கார்த்தி , எவ்வுளோ நாளு தான் இப்படியே பயந்துட்டு ஆசைய மட்டும் வச்சிட்டு இருக்கிறது"

"அப்போ நான் சொல்லுறது போல பண்ணு, ஆனா மயிரு எப்போவும் நான் ஒன்னு சொன்னா அதை அப்படியே முழுசா சொதப்பிட்டு வர "

"என்னடா செய்யுறது பயமா இருக்குடா , அப்படியே ஹார்ட் பீட் அடிக்கிறது எனக்கு கேட்கும் மச்சி!!! அவ பக்கத்துல இருக்குறப்போ "

" அது தான் மச்சி லவ்வு "

"லவ்வுலாம் இல்லை ஜஸ்ட் அவ என்ட்ட ஒரு நல்ல ப்ரெண்டா பழகினா போதும் மச்சி "

"இப்படி தான் ஆரம்பிக்கும் அப்புறம் நீயே சொல்லுவ பாரு "

"இல்லடா சில நேரம் அவ பேசுறது ரொம்ப க்ளோஸா வரது போல இருக்கும் , எப்படி சொல்லுறது ? ஹ்ம்ம் ... எப்படியும் மூணு நாலு மாசம் இருக்கும் தான அவள் கூட நான் வேலை பார்த்து கொண்டு இருப்பது? ஆரம்பத்துல ரொம்ப கேஷ்வுளா தான் பேசுனா மச்சி ஆனா, இப்போ அப்படி இல்லடா. "

"அடங்கப்பா உன் கதைய தான் தினமும் புலம்புறியே விடுடா , நாளைக்கு உன் ஆளு பிறந்தநாள், இப்போ நான் சொல்லுறது போல மெசேஜ் பண்ணு , நாளைக்கு உன்ன மீட் பண்ணனும்னு சொல்லு "

"அப்புறம்"

"ஓகே சொல்லிட்டா அவ்வுளோதான் மச்சி 80% கன்பார்ம் "

"எப்படிடா ஓகே சொல்லுவா இப்போ தான் முதல் தடவ "

"அப்படி இல்லடா, எப்போ அவ நீ தம் அடிக்குறத பார்த்து பீல் ஆகி உன்கிட்ட பேசாம இருந்தாளோ, அப்போவே அவளுக்கு உன் மேல ஒரு அக்கறை இருக்குடா. நீ கூப்பிடு அவ வருவா "

"சரிடா "

"ஆனா மச்சி ஈவினிங் கூப்பிடாத ஏன்னா அவளுக்கே லேட் டைம் தான் வொர்க் முடியும் ஸோ மார்னிங் வேலைக்கு போறதுக்கு முன்ன பார்க்கலாம்னு சொல்லு "

"ஆமாம் மச்சி சரி தான், அவ வரலைனாலும் என்னை தப்பா நினைச்சிட கூடாது "

"எல்லாம் சரியா வரும் , ஆனா மயிரு சரக்கு கேட்டா வாங்கி தர மாட்ட அவளுக்கு போயி இவ்வுளோ ரூபாய்க்கு கிப்ட்டு *ண்டை மட்டும் வாங்கு "

"அடிங்க *ண்டை தப்பா பேசுன கடுப்பாகிடுவேன்"

"போடா போடா கரெக்ட் பண்ணிட்டு பேசுடா "

"ஓடிடு கார்த்தி நான் அவள்ட பேச போறேன் "

"சரி சரி சீக்கிரம் பேசிட்டு படு அப்போ தான் காலைல ப்ரெஷ்ஷா போகலாம் "

சரி அவளுக்கு மெசேஜ் பண்ணுவோம் ஆண்டவா எப்படியாச்சும் அவ வரணும்,

"ஹாய் "

என்னடா டக்குனு ரிப்ளை வருது டேய் சக்தி கலக்குற

"ஹாய் என்ன பண்ற "

என்ன சொல்லலாம் ஹ்ம்ம் சரி தட்டி விடுவோம்.

"இல்லை அனு நீ தப்பா நினைக்கலனா ???"

என்னடா நேரா விஷயத்துக்கு போயிட்டோம் , ரிப்ளை பண்ண மாட்டாளோ...?? கிளிஞ்சது போ .... அட வந்துருச்சே

"என்ன சக்தி சொல்லு "

டே டே நல்லா யோசிச்சிக்க அவளே ஒரு வாய்ப்பு கொடுத்துட்டா

"அனு நாளைக்கு மார்னிங் ரெண்டு பேரும் ஒண்ணா ஆபிஸ் போகலாமா "

நடக்கிறது நடக்கட்டும் பார்த்திடுவோம் ,ஏதும் வரல ,குவாட்டர் அடிச்சிட்டு குப்புற படுத்திட வேண்டியது தான்.... அய்யயோ என்னமோ வந்துருக்கு திட்டி இருப்பாளோ ?????

"என்ன திடிர்னு தைரியம் வந்துடுச்சா "

அட ஆண்டவா என்ன பண்ணுறது ??? கார்த்தி கார்த்தி இங்க வாடா டே.. டே... எங்கடா போயி தொலைஞ்ச ???

"ஹா ஹா அப்படி இல்ல அனு"

அய்யயோ நான் என்ன பன்னுறதுனே தெரியலையே.

"ஓகே சக்தி நாளைக்கு நா வெயிட் பண்ணுறேன் நீ வா போகலாம் "

"தேங்க்ஸ் அனு நீ வெயிட் பண்ண வேணாம் , நான் தான் உனக்காக வெயிட் பண்ணுவேன் "

"ஹா ஹா போடா நான் தான் வெயிட் பண்ணுவேன் "

"அனு இப்போ நான் பறக்குறேன் தெரியுமா "

"ஹையோடா ,,, நாளைக்கு என்ன டே தெரியுமா ??? "

" ஹ்ம்ம் அதுக்காக தானே நாளைக்கு "

"ஹய் ரியலி "

"எஸ் அனு, கண்டிப்பா நாளைய நாளை நீ மறக்க மாட்ட "

"ஹ்ம்ம் மீ டூ வெயிட்டிங் சக்தி"

"ஓகே அனு டைம் எத்தனை "

"இதுக்கு மெசேஜா முடியல சக்தி "

"சொல்லு அனு ப்ளீஸ் "

"11.59"

"இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் என் இனிய அனுவிற்கு, இன்று நீ பெரும் வாழ்த்துக்களை போல என்றும் நீ வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்"

"ஹே சக்தி thank you so much da      dear "

போடு இதை இதை தான் எதிர்பார்த்தேன். நான் அவள்ட லவ்வ சொல்லலை ஆனா கிட்டத்தட்ட சொல்லிட்டாளே அனு.

"டே கார்த்தி கார்த்தி இந்த கான்வேர்ஷேஷன பாரேன் ப்ளீஸ் மச்சி எந்திரிடா மாமா , புல் அடிப்போம்"

"என்னடா "

"ப்ளீஸ் பாரு மச்சி "

"ஹ்ம்ம் ...... டே மச்சி கலக்குற ...... அட ...... போடு வக்காளி ......ஹ்ம்ம் .... ரைட்டு அவ்வுளோதான் மச்சி, இனி நீ தான் டெவலப் பண்ணனும்"

" எப்படிடா "

"ஜஸ்ட் நாளைக்கு பேசுறப்போ ஈவினிங் படத்து கூப்பிடு "

" டே வருவாளா ??? "

"நீ கூப்பிடுடா கண்டிப்பா வருவா , எத்தனை பேர பார்த்து இருக்கேன் "

"ஹ்ம்ம் "

" படத்துக்கு வந்துட்டா பினிஷ் மச்சி ....மெதுவா டைம் பார்த்து அப்படியே அழகா கைய வச்சிடு "

"டே என்னடா சொல்லுற "

" ஆமாம் மச்சி நீ கைய வச்சிடு , அவ ஒன்னும் சொல்லலை அப்படியே என்ஜாய் பண்ணு ரூம் போட்டுறு, நீ ஒன்னும் செய்ய வேண்டாம் அவளே பார்த்துக்குவா "

"எப்படிடா சொல்லுற??? எனக்கும் ஆசையா தான் இப்போ இருக்கு மச்சி "

"அதான் பாயிண்ட் , கைய அவ தட்டி விட்டா டக்குனு எந்திரிச்சி வெளிய வந்திடு "

"ஏன்டா"

"அப்படியே ரூம்க்கு வந்துடு மச்சி , அவளே திரும்பவும் உன்ட வருவா அதான் பொண்ணு"

"என்னமோ சொல்லுற பார்ப்போம் "
***********************************************************************************************
"அனு என்ன பேஸ் புக்ல பெர்த் டே நாளைக்குன்னு வருது, உனக்கு தான் போன வாரம் முடிஞ்சதே "

"அதுவாடி ச்சும்மா "

"ஹே எவன்டி"

"விடு நாளைக்கு சொல்லுறேன்"

"ச்சும்மா சொல்லுப்பா "

" ஹே அவனே பழமாட்டம் இருக்கான் அதுக்கு தான் பிட் போட்டுருக்கேன்"

"ஹ்ம்ம் அப்போ அடுத்த விக்கெட் காலி"

"எங்க அவன் நமக்கு மேல இருந்தான்னா ???"

"அனு நீ கவ்வுத்துடுவடி அவன "

"பார்ப்போம் பார்ப்போம் குட் நைட் "